கிறிஸ்துவுக்குள் குழந்தையாகிய அவன்!!! - Tamil Christian Article

கிறிஸ்துவுக்குள் குழந்தையாகிய அவன்!!!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.....
கல்வாரி மாமலை மேட்டிலே...
கொல்கொதா கொடுமுடியிலே...
பாரச்சிலுவையை தன் முதுகில் ஏந்திச் சென்று
தான் ஈன்றெடுக்கப் போகும் 
தன் செல்ல மகனுக்காக
தன் தேகத்தையே 
பலியாக்கிக் கொண்டிருந்தார் ஒரு
பாசத்தகப்பன்.....!!!!!

பார்ப்போரை பிரமித்து கலங்க வைக்கும் ரூபத்தில்.....
தன் உதிரத்தின் கடைசிச் சொட்டையும் சிந்தி...
சாபச் சிலுவையில்
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவே
தொங்கி நின்றார் அந்த பாசமிகு தகப்பன்!!!!
அடிக்கிறவர்களுக்குத் தன் முதுகையும்
தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்குத் தன்
தாடையையும் ஒப்புக் கொடுத்து.....
அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் 
தன் முகத்தை மறைக்காமல்
மூன்றாணியில் தொங்கி நின்றார்
அந்த பரமபிதா.......!
சாட்டைகள் அவர் உடலை 
கன்னாபின்னாவென்று மேய்ந்து அவரை
சின்னாபின்னமாக்க...
எந்த மனுஷனைப் பார்க்கிலும் 
அந்த கருணைப் பிதாவின் முகப்பார்வையும்
எந்த மனுபுத்திரனைப் பார்க்கிலும்
அந்த அருட்கடல் இயேசுநாதரின் ரூபமும்
அந்தக் கேடடைகிறது...!!!
சொல்லொண்ணா துயரம் சகித்த அந்த
அன்புத்தகப்பனின் மனமோ.....
குற்றநிவாரணபலியாக தன்னையே ஈந்த
அந்த செல்லப்பிதாவின் உள்ளமோ.....
பட்டப்பாடுகளால் தான் பெற்றெடுக்கப் போகும்
தன் அன்பு மகனைத் தம் மனக்கண்களால் காண்கிறது....

தான் பட்ட எல்லா ஆத்தும வருத்தத்தின் பலனை
எண்ணிப் பூரிக்கிறார்....!
அகமகிழ்வடைகிறார்....!!
வலி ததும்பும் தேகத்தோடும்....
பாசம் மிகும் உள்ளத்தோடும்....
தன் செல்லமகனைத் தனக்காகப்
பெற்றெடுக்கிறார் அந்த பரமதகப்பன்....!!!
எங்கேயோ தூரமாய் விலகி.....
பரலோக ராஜ்யத்துக்கு அந்நியனாக.....
காயப்பட்டுக் குற்றுயிராக.....
தாகத்தோடு, ஏக்கத்தோடு
தன் இரத்தத்தில் கிடந்த அவனைப் பார்த்துப்
பிழைத்திரு என்கிறார்.......!!!!!! - தன் விலையேறப்பெற்ற உதிரத்தை
விலைக்கிரயம் செலுத்தி
அவன் பாவ சாப சுமைகளைத் தன் 
தோளில் சுமந்து......
அவனைத் தனக்குள் பெற்றெடுக்கிறார்...!!!

தேவனாலே பிறந்து ......
புத்தம் புதியதாய் காட்சியளிக்கிறான் அவன் !!!!
தன் ஆத்துமாவை மரணத்திலூற்றிக் கொள்ளைப் பொருளாய் பெற்றுக்கொண்ட
தன் அன்பு மகனை
அகமகிழ்வோடு நோக்கிப் பார்க்கிறார் அந்த அன்பு தகப்பன்.....
குழந்தையாகிய அவனைக் கண்டு
அவர் மனம் பொங்குகிறது!!!
அவர் உள்ளமெல்லாம் 
அன்பு மழையால் நனைகிறது.....!!!!!
பரலோகமே அவனை உற்றுநோக்கிப் பார்த்துப் பூரிக்கிறது......!!!!!

தன் உதிரத்தை விலையாக்கிப் பெற்றெடுத்த
தம் ஆசை மகனை......
கருத்தோடு வளர்த்தெடுக்க....
திருவசனமெனும் களங்கமில்லா ஞானப்பாலை
அளவில்லாமல் ஊட்டினார் அந்த 
பாசம் நிறைந்த தகப்பன் !!!
புதிதாக பிறந்த குழந்தையல்லவா அவன்!!!!
திருவசனமாம் களங்கமில்லா ஞானப்பாலை 
வாங்கி வாங்கிப் பருகி 
தன் தாகம் தணிக்கிறான் அவன்!!!!
தன்னை ஈன்றெடுத்தத் தன் பரமத்தகப்பனோடு
ஒட்டி உறவாடி 
அவரோடு தன் முழு நேரத்தையும் செலவிடுகிறான் அவன்! !!!!
அவன் ஆத்துமா புஷ்டியடைவது கண்டு
மனம் பூரிப்படைகிறார் செல்லத்தகப்பன்....!!!!
என் உதிரத்தின் உத்தமபுத்திரனல்லவா அவன்!!!
என் உயிரீந்து மீட்ட உயிர் சொத்தல்லவா அவன்!!!
அகமகிழ்வடைகிறார் அந்த ஆசை தகப்பன்!!!!
எனக்காக இப்பாரையே அசைப்பான்!
நல்ல புருஷனாய் என் யுத்தங்களை
நடப்பிப்பான்!!
இவ்வுலகில் என் பேர் சொல்லும்
சாட்சி நிறைந்த வாழ்வு வாழ்வான் என!!!!
தன் மகனின் எதிர்காலம் நினைத்துப் பூரிப்படைகிறார் அந்த அன்புத் தகப்பனார் ......

ஆனால் 
 அந்த பரமதகப்பனின் அவா 
நெடுநாள் நீடிக்கவில்லை!!!!!
நாளாக நாளாக...
ஜீவ ஆகார நாட்டம் மெல்ல மெல்ல அவனில்
குறைய ஆரம்பித்தது!!!!
மணிக்கணக்கில் தன்னோடு அளவளாவிய அவன்.....
தற்போது பேசுவதையே நிறுத்திவிட்டது கண்டு
நிலைகுலைந்து விட்டார் அந்த கருணைவள்ளல்!!!!
அவன் ஆத்துமா பலவீனமடைவது கண்டு கலங்கிய அந்த அன்புத் தகப்பன்.....
பலமான ஆகாரத்தை அவனுக்கு ஊட்டவிழைந்த போது.....
அந்த அன்புத் தகப்பனாரின் இருதயம் 
சுக்கு நூறாக உடைந்தது!!!!
ஆம்!!!
தன் கடைசிச் சொட்டு உதிரத்தையும் சிந்தி பெற்றெடுத்த அந்த மகனால்
பலமான ஆகாரத்தை சிறிதளவுகூட 
ஜீரணிக்க முடியவில்லை!!!!!!! 
எழுந்து நிற்க திராணியற்றவனாய்.....
உபதேச ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தியிழந்தவனாய் நிற்கும் அவன் நிலைக் கண்டுமனம் வெதும்பிப் போனார் அவர்!!!!
கிறிஸ்துவுக்குள் குழந்தையான அவனது
வளர்ச்சி குன்றிய மனமோ......
ஆசீர்வாதமாம் வாக்குத்தத்தப் பாலை மட்டும்
ஆவலோடு வாங்கி வாங்கிப் பருகியது!!!!!

ஆம்!!!!
கஷ்டங்களை சகிக்க அவனிடம் பெலனில்லை!
சோதனைகளை எதிர்த்து நிற்க அவனிடம் தைரியமில்லை!!
முடங்கிப் போன முடவனாய், 
கண் சொருகிப் போன குருடனாய்,
காதிருந்தும் கேளாதவனாய்,
பெருவயிற்றுச் சோம்பேறியாய்,
துர்க்குணத்தில் தேறினவனாய்,
புத்தியில் குழந்தையாய்
மொத்தத்தில்
ஒரு வளர்ச்சி குன்றிய குழந்தையாய் இருந்தானவன்!!!!

தகப்பன் குமுறுகிறார்.......
ஐயகோ!!!!
என் உதிரம் சிந்தி அவனை மீட்டேனே!
எனக்காக எதையெதையோ சாதிப்பானென
கனவு கண்டேனே......
ஆனாலோ அவன்......
என் ஆத்தும வருத்தத்தின் பலனை சிதைத்துவிட்டானே!
ஆவிக்குரியவன் என்ற பேரில் வாழும் மாம்சத்துக்குரியவனாகிவிட்டானே!!!!
நிலத்தைக் கெடுக்கிற கனிகொடா அத்திமரமாகி விட்டானே!!!
அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறானே!!!!
பொல்லாங்கனின் காலடியில் புரளும் அடிமையாகிவிட்டானே!!!!!
பலவித காற்றில் அடிபட்டு அலைகிற அலையாய் இருக்கிறானே!!!!!!
மீண்டும் மீண்டும் பாவக்குழியில் விழுகிறானே!!!!!!
நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாய் இருக்கிறானே!!!!!!
என்ன செய்வேன் என் மகனுக்காக......?
என் மகனை எப்படி நான் கைவிடுவேன்??
என் மகனுக்காக என் இருதயம் குழம்புகிறது......
என் பரிதாபங்கள் அவன்மேல் ஏகமாய் பொங்குகிறது.......
கீலேயாத்தில் பிசின் தைலமில்லையோ?
ரண வைத்தியனுமில்லையோ??
பின்னே ஏன் என் மகன் குணமடையாமற் போனான்??????
கதறினார்... கலங்கினார்.....கண்ணீர் விட்டழுதார்......
உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது
உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் உனக்கு நலமாயிருக்கும் 
எனக் கூறி அழுதார்......

அதுமட்டுமா!!!!!
தன் பரம தகப்பனிடமும் வேண்டி நின்றார்
அவனுக்காக நல்ல மத்தியஸ்தனாய்......
ஐயா!!!!
இந்த ஒரு தடவை மட்டும்.....
இந்த ஒரே ஒரு தடவை மட்டும்......
என் மகனுக்கு மறு வாய்ப்பளியுங்கள்.....
அவனை பண்படுத்துகிறேன்....
அவனைக் குணப்படுத்தி 
என் சித்தம் செயல்படுத்துகிறேன் என.....
பரம தகப்பனும் அந்த கருணை வள்ளலின்
பாசமுகம் கண்டு அவனுக்கு மறுவாய்ப்பளிக்கிறார்.......
ஒரு முறையா?
இரண்டு முறையா??? 
இல்லை மூன்று முறையா??
எத்தனையோ முறை வாய்ப்பளித்துவிட்டார் அவனுக்கு.........
உபதேசமெனும் எரு போட்டு அவன் ஒழுங்கில்லாவாழ்வை சீரமைக்க முயன்றார்......
ஆனால் அவனோ....
கசப்பு கனிகள் நிறைந்த
திராட்சை செடியாக.....
பெயரில் மட்டும் கிறிஸ்தவனாக.....
நற்சாட்சி கெட்டவனாக....
உதிரம் சிந்தி ஈன்றெடுத்தவர் பெயருக்கு
களங்கம் விளைவிக்கும் மகனாக
எங்கேயோ தூரமாக ஓடிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு முறையும்....................

இப்போதும் கூட.....
பரமபிதா எச்சரிக்கிறார்
அந்த அன்பு தகப்பனிடம்........
இது தான் அவனது கடைசி வாய்ப்பு என.....
பரிதபிக்கும் இதயத்தோடும்.....
கலங்கி வழிந்தோடும் கண்களோடும்....
மீண்டும் ஏங்கி நிற்கிறார்......
அந்த அன்புத் தகப்பன் இயேசு கிறிஸ்து......!!!!!!
மீண்டும் அவரண்டை ஓடி வருவானா அவன் ?????
பரமனின் சித்தம் செய்வோனாய் மாறி வருவானா?????
காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இக்கேள்விக்கு.............


                              அன்புடன்,
                                        ஜெபிலா ஜாஷ்வா 










     

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?