இன்று நீ மவுனமாயிருந்தால்......! - Tamil Christian Article

             இன்று நீ மவுனமாயிருந்தால்......!



அன்றொரு நாள்...
       எலியா என்றதோர் தேவமனிதன்....
       சேனைகளின் கர்த்தருக்காக வெகு 
       பக்திவைராக்கியமானவன்.....!
ஆனால் ஒருநாள்......
       வெறும் குரல் எழுப்பும் மத்தளம்        யேசபேலின் வெற்றுச்சவாலுக்கு
       அப்பளம் போல மனசு     நொறுங்கிப்போய்
        படுத்துக்கொண்டான் ஒரு சூரைச்செடியின் சுகம்தரா நிழலிலே......
கர்த்தரின் தீர்க்கர்களை கொன்று குவிப்பேன் என உறுமுகிறாள் யேசபேல்
ராஜ்யம் முழுவதையும் கலக்கம் சூழ்ந்து கொள்ள......
நன்றாக தூங்கி இளைப்பாறுகிறார் தேவமனிதன்......
அகிலத்தையும் படைத்தவர் கதறுகிறார்.........!!!!!
எலியாவே! என் தாசனே.....!! 
நீ எங்கே இருக்கிறாய்....????
நீ போக வேண்டிய பிரயாணமும்,
செய்ய வேண்டிய வேலைகளும் வெகுஅதிகமென.....!
எலியாவுக்கோ.....
கர்த்தரின் கதறலை விட
யேசபேலின் உறுமலே
பெரும்மலையாக காட்சியளிக்க......
மீண்டும் தஞ்சம் புகுந்து இளைப்பாறுகிறார் ஒரு மலையின் கெபிக்குள் பத்திரமாய்.....!!
சர்வவல்லவருக்கோ அவசரத்தேவை ஒருமனிதன்......!
ஆனால்......
புரிந்து கொள்ளவேயில்லை தேவமனிதன்.....!!
முடிவில்.....
சர்வவல்ல தேவனின் நீதி நிலைநாட்டும் பணி.....
தேவனுக்கு முன் நின்ற எலியாவைத் தாண்டி......
மாடுகளின் பின்சென்ற எலிசாவை நோக்கிச் சென்றது.....!!!!!!

மற்றொரு நாள்....
கொடுமை மேல் கொடுமை இஸ்ரவேலருக்கு.....
கானானின் ராஜா யாபீன் தன் கொடுங்கோலை தேவஜனத்தின் பிடரியில் வைக்க.......
முறையிடுகின்றனர் பாராளும் வல்லவரை நோக்கி......
படைத்தவர் பொறுப்பாரோ....?
பாராக்கை எழுப்புகிறார் இரட்சகனாக......
தெபொராள் வாய் வழியாக கர்த்தரின் கட்டளை:
போ தாபோர் மலைக்கு......
சேனாதிபதி சிசெரா உன் கையில்......
பாராக்கையோ பயம் சூழ்ந்து கொள்ள
தெபொராளை துணைக்கு அழைக்க.....
சர்வவல்லவரின் இரட்சிக்கும் பணி....
பராக்கிரமசாலி பாராக் கை நழுவி...
கூடாரவாசி யாகேலிடம் சென்றது......!!!!

இன்னுமொரு நாள்....
அமலேக்கை சர்வசங்காரம் செய்...
இது உன்னை அரியணை ஏற வைத்தவரின் ஆதாங்க தொனி!!!
கர்த்தரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு
யுத்தத்திற்கு புறப்பட்ட சவுலோ....
புறந்தள்ளினான் தேவசித்தத்தை....
தப்பவைத்தான் தனக்காக நலமானவற்றை......
சர்வலோக நியாதிபதி வியாகுலப்படுகிறார்!!!!
இஸ்ரவேலின் நியாதிபதி சாமுவேலிடம் அங்கலாய்க்கிறார்.....
சவுலை அரியாசனம் அமர வைத்தது தனக்கு மிகுந்ததோர் மனசஞ்சலமென!!!!
முடிவில்...
ராஜாதி ராஜனின் சித்தம் செய்யும் பணி...
கழுதையைத்தேடி நடந்து ராஜாவான சவுலை விட்டு
ஆடுகளின் பின்நடந்த தாவீதிடம் சென்றது!!!!!

இன்றும்...
நம் ஆத்தும மீட்பர் கதறுகிறார்......
என் ஜனம் அறிவில்லாமல் சங்காரமாகிறார்களே......!!
யாரை நான் அனுப்புவேன்?
யார் என் காரியமாய் போவான்? என....
ஆத்தும நாதனின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பம் உனக்குத் தெரிகிறதா....???
கதறும் ஓசையின் ஏக்கமிகு ஆசை உனக்குப் புரிகிறதா......???
தேடுகிறார்  தேடுகிறார் தேடுகிறார்.....
இன்றும் தேடிக்கொண்டே இருக்கிறார் ஜீவாதிபதி.....!!!!!
தேசத்திற்காக திறப்பிலே நிற்கும் ஒரு நெகேமியாவை!!!!!
பலகணிகள் திறந்து வைத்துக் கதறும் ஒரு தானியேலை!!!!!
உபவாசத்தோடு தன் மக்களுக்காக போராடும் ஒரு எஸ்தரை!!!!!
அமைதியான இந்த காலத்திலே
அழைத்தவரின் கெஞ்சும் குரலுக்கு நீ மவுனமாயிருப்பாயானால்.....

நீ மவுனமாயிருப்பாயானால்......

சமாதானமுள்ள தேசத்தை நீ அடைக்கலமாக்கிக் கொண்டு
இளைப்பாறி, புசித்து, குடித்து திருப்தியாயிருந்துவிட்டாயானால்.....
நம் தேசத்துக்கு இரட்சிப்பு நிச்சயம் வரும்........
ஒரு பிஞ்சு பாலகனாலோ.....
ஒரு வழிப்போக்கனாலோ.....
யார் மூலமாகவும் வரலாம் இரட்சிப்பு .....
அல்லது....
சேவல் கூட குற்றத்தைக் கூவி அறிவிக்கலாம்!
கழுதை கூட பேசி மாறுபாட்டை உணர்த்தலாம்!!
மீன் கூட வாய் திறந்து சொல்லலாம் கீழ்ப்படியாமையின் அபாயத்தை!!!
யார் மூலமாகவும் வரலாம் இரட்சிப்பு!!!!
ஆனால்......
அபாத்திரமாய் வெட்கப்பட்டுப் போவாய் நீ.....!!!!!
குற்றம் சுமரும் உன்மேல்...!!!!
ஆம் உன் மகிமையின் தேவன் வெளிப்படும் போது.....
படைத்த உன் எஜமான் கணக்குக் கேட்கும்போது....
உன் சம்பாத்தியத்தைக் காட்டி கனம் பெறப்போகிறாயோ?
இல்லை வெறுங்கையை நீட்டி வெட்கப்படப் போகிறாயோ??
எது வேண்டும் தெரிந்துக் கொள்.....
வெறுங்கையோ?
வெற்றியின் கிரீடமோ??

முடிவு உன் தெரிந்துகொள்ளுதலில்...!!!!!!


                        அன்புடன்,
                               ஜெபிலா ஜாஷ்வா


Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?